Monday 14 September 2009

கொலைக் களத்தில் கோல மயில்.....


மாஞ்சோலை ஒன்றிலே
மாமர நிழலின் கீழ்
மன்னவனின் மடியிலே
மயிலொன்று படுத்திருக்கு.....

மாங்கனிகள் பாரத்தில்
கிளைகள் எல்லாம் நிலம் தடவ....

மயக்கும் விரல் கணையால்
மடி கிடந்த பொன்மயிலின்
மென் ஸ்பரிசம் அவன் தடவ...

ச்சீ.. வேணான்டா....
கையை எடு....
நான் வீட்டை போப்போறன்....

இல்லை..இல்லை
நாளைக்கு வயல் வேலை
நான் வர மாட்டேன்டி..
அதனாலே இன்று
உன்னை தொட்டுவிடப் போறேன்டி.....

இல்லையடா... செல்லம்
இது வேண்டான்டா... இப்போ
நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால்
நாம் வீட்டைபோவோம் இப்போ...

சரியடி போவோம்....
காலையிலே எனக்கு
என்ன சாப்பாடு கொண்டருவாய்
நான் மண்வெட்டி பிடிக்கமுதல்
என்னை மகிழ்விக்க என்னதருவாய்....

அடி....வாங்குவாய்...! ஆசையைப் பாரு....
அம்மா அப்பத்துக்கு போட்டிருக்கா
காலை அப்பம் கொண்டு வாறேன்டா
அதைச் சாப்பிட்டுவிட்டு
ஒழுங்காய் வயலுக்குப் போடா...!

இது நடந்த இடம் கிளிநொச்சியில்
அழகான ஓர் மாலை.....
செஞ்சோலை அருகிருந்த
செழிப்பான மாஞ்சோலை....

இது கிளிநொச்சிக்கு
செல்லடிக்கத் தொடங்க முதல்
தித்தித்த ஓர் காதல்....
மழைபோல் செல்கள் விழத்தொடங்க
சிதறிவிட்ட ஓர் காதல்.....

இந்த ஜோடிப் புறாக்களும்
குடும்பத்துடன் விடாமல் தாம் பறந்து
விஸ்வமடு... உடையார்கட்டு
சுதந்திரபுரம்.... தேவிபுரம்...
புதுக்குடியிருப்பு.... முள்ளிவாய்க்கால் வரை....
வீழ்ந்திருந்த எம் பிணங்கலெள்ளாம்
விடாமல் பார்த்ததினால்
அவர் காதல் கோட்டைகளில்
கருகிய பிணக்குவியல்....

இறுதியில்...
சுதந்திரச் சுவாசம் போய்
மரணத்தின் வாசம்....
துப்பாக்கி முனைகளின் முன்
முட்கம்பி வன வாசம்......

கூட்டத்தில்
அந்தக் கொலைக் களத்தில்.....
பிரித்தெடுத்த வலையத்தில்
அந்தப் புறாக்கள் சந்தித்தும்....
பேச்சு அனுமதியும்
பெற்றிராத அடிமைகளாய்.....

அவளுக்கு துப்பாக்கி முனையில்
தனியறையில் விசாரனை.....
அறையில் கதறல் சத்தம்
அவனுக்குச் சொல்லியது
அந்தச் சோகக்கதை.....

அரை மணி நேரத்தின் பின்
அவழ்ந்த கூந்தல்....
அழமுடியாக் கண்கள்...
வெளிறிய உதடுகள்....
வேகமிழந்த அந்த மானின் நடை....

வெறும் நிலத்தில் வந்து அமர்ந்தாள்
அழாத முகத்துடன்.......
அவள் அங்கே அமர்ந்திருக்க
அடுத்த விசாரணைக்கு.
அழைப்பு அவனுக்கு.....

அங்கே அலறல் சத்தமில்லை
ஆனாலும் அவதிப்படும் சத்தம்......
பின் சிறிது அமைதி....
அதன் பின் துப்பாக்கி சத்தம்....
போனவன் வரவில்லை
பிணம் ஒன்றை
இழுத்துச் செல்லும் காட்சியங்கே...
அதைப் புரிந்துகொண்ட அவளுக்கு
அவன் விரல் பட்ட கன்னத்தில்
நனைக்கிறது கண்ணீர்த் துளிகள்......


இளங்கவி.....

3 comments: